ETV Bharat / city

போலி செயலியை உருவாக்கி பணத்தை சுருட்டிய கும்பல் அதிரடி கைது

author img

By

Published : Jul 9, 2021, 8:11 AM IST

Updated : Jul 9, 2021, 10:57 AM IST

ஷேர் மீ (ShareMe) செயலியைப் போன்று உருவாக்கப்பட்ட போலி செயலியில் வீடியோக்களை லைக் செய்து, ஷேர் செய்தால் பணம் தருவதாக நம்பவைத்து பல லட்சங்களை சுருட்டிய கும்பலை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஷேர் மீ செயலியால் பணத்தை இழந்த நபர்
ஷேர் மீ செயலியால் பணத்தை இழந்த நபர்

சென்னை: மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (28). இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

பின்னர் பணியிலிருந்து நீக்கியதால் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பணி கிடைக்காமல் சுற்றித் திரிந்துள்ளார்.

போலி செயலியை நம்பி ஏமாற்றம்

இந்நிலையில் தினேஷின் நண்பர் சுந்தர் என்பவர் போலியாக உருவாக்கப்பட்ட ஷேர் மீ (ShareMe) என்ற செயலியை லிங்க் மூலமாக பதிவேற்றம் செய்து, அதற்குரிய வங்கிக்கணக்கு எண்ணில் ரூ. 30 ஆயிரம் செலுத்தி செயலியில் வரக்கூடிய வீடியோக்களை லைக் செய்து, லைக் செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போலியாக உருவாக்கப்பட்ட செயலியில் பதிவிட்டால் ஒரு பதிவிற்கு ரூ. 18 வீதம் நாளொன்றுக்கு ரூ. 1,800 வரை சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மாதம் ரூ.54 ஆயிரம் வரை ஈட்டலாம் எனவும் தினேஷிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய தினேஷ் தனது நண்பரான லோகேஷிடம் இதனைத் தெரிவித்துள்ளார். லோகேஷ் தனது கையிலிருந்த ரூ. 30,000 பணத்தைக் கடந்த நவம்பர் 28ஆம் தேதி அனுப்பியதாகவும், அதேபோல் தினேஷ் மூன்றாயிரம் ரூபாயை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கும் அனுப்பியும் உள்ளார்.

பணம் மோசடி
பணம் மோசடி

மோசடி செய்த நபர்கள்

இதனையடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர் லோகேஷ், செயலியில் வரக்கூடிய வீடியோக்களை லைக் செய்து பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென்று அந்த செயலி நிறுத்தப்பட்டது. இதனால், தான் ஏமாந்ததை உணர்ந்த தினேஷ், இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது இதேபோல் போலி செயலியின் மூலமாக பல நபர்கள் ஏமாந்து பணத்தை இழந்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்காரர்கள் மீது ஜே.ஜே. நகர் உள்பட பல காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இந்தப் புகார் தொடர்பாக மாதவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தச் செயலி தொடங்கப்பட்ட நபரின் விவரங்கள் மற்றும் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

கிடைக்கப்பெற்ற விவரங்களை வைத்து திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சையத் ஃபக்ருதீன், மீரான் மொய்தீன், முகமது மானஸ் ஆகியோரைக் கைதுசெய்து, தலைமறைவாக உள்ள தமீம் அன்சாரி என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இவர்களிடமிருந்து ரூ. 60,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் எத்தனை நபர்களிடம் இவர்கள் மோசடி செய்துள்ளனர் என்பதை காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு'

Last Updated :Jul 9, 2021, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.